For this Day:

;

"இரண்டணா" – சுஜாதா

'இரண்டணா' சுஜாதாவின் ஸ்ரீரங்கத்துக் கதைகள் தொகுப்பில் 24-வது கதையாக இடம் பெற்றுள்ளது. வெளி வந்த வருடம் 1998. (இந்தத் தொகுப்பில் மொத்தம் 34கதைகள்)

இரண்டணா–சுஜாதா

இப்போதும் சிலர் இரண்டணா நாலணா என்ற சொற்களைப் பயன்படுத்தினால் சுதந்திரத்துக்கு முன் பிறந்தவர்கள் என்று நிச்சயமாக சொல்லலாம். இரண்டணா ஒரு தனி நாணயம். பித்தளை. சதுர வடிவில் இருக்கும். ஒரணா போல அசிங்கமான நெளிநெளிகள்-இல்லாமல் கூர்மையான முனைகளை மழுப்பி ஒருபக்கத்தில் ஆறாம் ஜார்ஜ் மன்னர் தன் தலையில் கிரீடத்துடன் சைடுவாகாக பார்த்துக்கொண்டிருப்பார். அவர் கிரீடத்தை தூக்கிப் பார்த்தால் அப்போது தான் கிராப்பு வெட்டிக் கொண்டிருக்கலாம் என்று தோன்றும்

இரண்டணா அந்த தினங்களின் பொருளாதாரத்தில் முக்கியமான நாணயம் இந்த நாட்களின் எட்டுபைசாவுக்கு சமம் என்று அதை அலட்சியம் பண்ணிவிடாதீர்கள். நான் சொல்லும் நாட்களில் சீரங்கம் திருச்சி பஸ் கட்டணம் இரண்டணா. பெனின்சுலர் கபேயில் தோசை இரண்டணா . கிருஷ்ணன் கோட்டை வாசலில் இலந்தைப்பழம் லேக்கா உருண்டை-கொடுக்காப்புளி எல்லாமே காலணாதான் அதாவது இரண்டணாவில் எட்டில் ஒரு பங்கு. டிபிஜி கடையில் அழிக்கும் ரப்பர் கட்டைபேனா மசிக்கூடு ரூல்டு பேப்பர் ப்ளாட்டிங் பேப்பர் வாங்கியும் இரண்டணாவுக்கு சில்லரை தருவார். அல்லது ஒரு புளிப்பு மிட்டாய் தருவார் . வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் போது மார்கழி மாதத்தில் பகல் பத்தில் தேர்முட்டியருகில் தரையில் பள்ளம் தோண்டி துருத்தி வைத்து சாணி பூசி பெரிய வாணலி அமைத்து அதில் கொள்ளிடம் மணலைக் கொட்டி அதனுடன் வறுக்கப்பட்டு உற்சாகமாக வெடிக்கும் பட்டாணி ஒரு பை நிறைய இரண்டணாவுக்கு கிடைக்கும், இரவு பெட்ரமாக்ஸ் வெளிச்சத்தில் பெரிய எழுத்து விக்ரமாதித்தன் கதை கொக்கோகம் போன்ற புத்தகங்கள் எங்கேயோ பார்த்துக்கொண்டு வாங்கலாம். ரங்கராஜாவில் 'காப்டன் மார்வல் 'படம் தரைடிக்கெட் இரண்டணா. தங்கராசு மிதிவண்டி நிலையத்தில் அவர்-சைக்கிள் இரண்டணாவுக்கு எடுக்கலாம் அதற்கு கீழே ஒரணா அரையணா காலணா தம்பிடி போன்ற பரிவார நாணயங்கள் இருந்ததால் இரண்டணா இருக்கிறவன் ஆகாகான் போல உணரலாம் விகடன் பத்திரிகை நீல நிறத்தில் அச்சிட்ட சிறுவர் மலருடன் இரண்டணா .ஒரு பாக்கெட் கலர்கலராக இருக்கும் பலப்பம் இரண்டணா. லிப்ஸ்டிக் போல சிவப்படிக்கும் மிட்டாய் ஐஸ்கட்டியை சரக்சரக் கென்று தேய்த்து சர்பத் ஊற்றி உறிஞ்சுவதுடன்-ஒரு காத்தாடி தலையாரி பம்பரம் எல்லாம் வாங்கலாம் என்ன என்னவெல்லாம்இரண்டணாவில் வாங்கலாம்!

அப்பேற்பட்ட இரண்டணா நாணயத்தை தொலைத்துவிட்டேன். சொல்கிறேன். பாட்டி என்னை ஒரு ஆழாக்கு எண்ணெய் வாங்கிக்கொண்டு வா என்று இரண்டணா கொடுத்து-அரையர் கடைக்கு அனுப்பினாள் கூடவே ஒரு கிண்ணியும் கொடுத்தாள். ஈயம் பூசினது வாயகன்றது.நான் அந்தவயசில் ஸ்தலத்திற்கு ஸ்தலம் ஓட்டம் தான்.ஒரு நிமிஷத்துக்குள் அரையர் கடைக்கு வந்து "மாமா ஒரு ஆழாக்கு எண்ணெய்" என்றேன் அரையர் கடை என்று எப்படி பெயர் வந்தது தெரியாது கடை சொந்தக்காரர் அரையர் இல்லை அய்யங்கார்தான். ஆனால் கோவில் அரையர்கள் பரம்பரையெல்லாம் கீழ உத்திர வீதியில் இருந்தார்கள் இந்த-அரையர் எங்கள் வீட்டிற்கு எடடுவீடு தள்ளி இருந்தார். சாதி வழக்கத்துக்கு மாறாக பலசரக்கு கடைவைத்திருநத ஒரே அய்யங்கார். சன்னமான குரலில் வரவேற்பார். எப்போதும் பலகையில் உட்கார்ந்து கொண்டிருப்பார் நிலக்கடலையோ முந்திரிப்பருப்போ எதையும் கண்ணெதிரே ,இருந்தாலும் வாயில் போட்டுக் கொள்ள மாட்டார். கையில் பனை விசிறிக்கொண்டு இருப்பார்.அவர் கடையில் ஏலக்காய் கிராம்பு கோதுமை அரிசி லவங்கப்பட்டை சீமெண்ணை எல்லாம் கலந்து ஒரு சுகமான வாசனை வீசும்.

"என்ன எண்ணைடா நல்லெண்ணையா தேங்கா எண்ணெயா ஆமணக்கு எண்ணெயா விளக்கெண்ணையா வேப்பெண்ணையா " என்றார்

அப்போதுதான் இவ்வளவு எண்ணெய் இருப்பது தெரிந்து நான் மீண்டும் பாட்டியிடம் ஓடி வந்து "என்ன எண்ணை பாட்டி?"

"உன்னை கன்னம் கன்னமா இழைக்கணும் நம்மாத்தில எப்பவாவது நல்லெண்யைத்-தவிர எதாவது பயன்படுத்துவமா நல்லெண்ணைதாண்டா"

மீண்டும் ஓடிப்போய் " ஒரு ஆழாக்கு நல்லெண்ணை மாமா"

"நல்லெண்ணை ஆழாக்கு ரெண்டரை அணா ஆச்சேப்பா பாட்டி கிட்ட போய் இன்னும அரைணா வாங்கிண்டு வரயா" நான் மீண்டும் ஓடி வந்து சொல்ல" ஏண்டா மடயா ஆழாக்கு ரெண்டரை அணான்னா ரெண்டணாவுக்கு உண்டானதை வாங்கிண்டு வரதுக்கென்ன புத்திகிடையாதா உனக்கு" இப்படி பரபக்கபரக்க ஓடிண்டேருப்பியா"

"நீ சொல்லவே இல்லையே பாட்டி" என்றேன் நியாயம் தானே "காதுல வாங்கிக்கோ அரையர் கிட்டபோயி போன வாரம்தான் ரெண்டணா ஆழாக்கு ஒரு முழு ஆழாக்கு கொடுத்தாரேன்னு கேளு இல்லைன்னா முக்காலே மூணுவீசம் ஆழாக்கு போடச் சொல்லு நன்னா பார்த்து எல்லா எண்ணெயும் பாத்திரத்தில விழுந்து கீழசொட்டாம வாங்கிண்டு வா வரப்ப ஓடி வராதே கொட்டிடப்போறே " இந்த எச்சரிக்கைகளுக்கெல்லாம் தேவை இல்லாதபடி அடுத்த முறை அரையர் கடைக்கு போக விடாமல் வழியில் ஒரு சம்பவம் நிகழந்தது/

ராஜன் கேர்ள்ஸ் ஸ்கூல் எதிரில் தெரு நடுவில் தேர்முடடியருகில் கொட்டு சப்தம் கேட்டது அதைக் கடந்துதான் அரையர் கடைக்கு போக முடியும் கூட்டம் கூடிக்கொண்டிருந்தது நையாண்டி மேளம் கேட்டது . மத்தளம் அவ்வப்போது உருமியது பைஜாமா அணிந்த ஒரு சிறுமி அலட்சியமாக உள்ளங்கைகளை தரையில் அழுத்தி பல்ட்டி அடித்து சுற்றி வந்தாள் அவளைவிட சற்றே பெரிய சிறுவன் ஒரு கழியை லாவகமாக தூக்கி நிறுத்த மஸ்தான் தரையில் வட்டம்-வரைந்து அதில் பாம்புப் பெட்டிகள் ஒரு மகுடி வேறு என்னஎன்னவோ உபரகணங்கள் கோழிமூக்கு இறகு போர்த்திய போர்வை கருப்புத் துண்டு என்று பலவித உபகரணங்களை பரப்பிக் கொண்டிருக்க "வாங்க வாங்க நாகூர் பாபா மோடி மஸ்தான் பரம்பரை , மனுசனை பாம்பாக்குவேன் பாம்பை-மனுசனாக்குவேன் "ஒரு கீரி ஆணியில் தனிப்பட்டு சுற்றி வந்து கொண்டிருக்க-மோடி மஸ்தான் என்னையே பார்த்து "பயப்படாத பக்கத்ல வந்து குந்து" என்று என்னை அழைத்தான்/ அந்த பரட்டைத்தலை சிறுமி சின்ன பல்வரிசையில் என்னைப் பார்த்து சிரித்தாள்

ஆழாக்கு எண்ணெயை மறந்தேன். முதல் வரிசையில்போய் உட்கார்ந்துகொண்டுவிட்டேன். அவ்வப்போது மத்தளம் தட்டிக்கொண்டு அவன் இடைவிடாமல் பேசினான்.

"கந்துமதக்கரியை வசமாக்கலாம் கரடிபுலி வாயைக் கட்டுவேன் சிங்கத்தை முதுகில போட்டுப்பேன் பாம்பை எடுத்து ஆட்டுவேன் … இது என்ன?" என்ற சபையோரில் ஒருவரை கேட்டான்.

"ஒரணா" "என்னது ஒக்காளியா" என்று கேட்க சபையில் சிரிப்பு "நெருப்பில அரதம்வச்சு வேதிச்சு வித்துருவேன் வேற யாரும்-பார்க்காம உலகத்தில உலாவுவேன் எப்பவும் இளமையா இருப்பேன்.மத்தொருவன் சரீரத்தில பூந்துருவேன்.தண்ணில நடப்பேன். நெருப்பில குந்துவேன் எல்லாம் எதுக்காக?" என்று கேள்வி கேட்டு தயங்கி தன் சட்டையை நீக்கி பட்டென்று வயிற்றில் எதிரொலிகேட்கத் தட்டி "பாழும் வவுத்துக்காக!"

"நீ காசு கொடுக்கவாணாம் உன் காசை உம் மடிலயே வெச்சுக்க வித்தை பாரு பாத்து மஸ்தான் குஷியாயிருச்சுன்னு ஒரணா ரெண்டணா கால் ரூபா அரை ரூபா ஒரு ரூபா தட்ல போடு பச்சைப்புள்ளையை பந்தாடப் போறேன்" எல்லாரும் பலமா கைத்தட்டுங்க என்று சொல்லி நாங்கள் கைதட்ட காத்திராமல் உய் உய் என விசிலடித்தான்.

நான் அவன் வித்தையில் பரிபூர்ணமாக ஐக்கியமானேன் "தகிரியமுள்ளவங்க யாராச்சும் இருந்தா வாங்க" என்று கேட்க ஒரு சிறுவன் முன்னால்வந்து நின்றான். அந்தப் பையனை கூப்பிட்டு அவன்முன் விரல்களை என்னவோ பண்ண அவன் சட்டென்று துங்கிப்போக அழுக்குத் துண்டால்-போர்த்திப் படுக்க வைத்தான் "யார் வூட்டுப் புள்ளையோ இது" என்றான் தரையில் ஒரு முகம் வரைந்தான். அந்த முகத்திற்கு ஒரு வாய் மட்டும் பெரிசாக வரைந்தான் பக்கத்தில் ஒரு பேனாக்கத்தியை வைத்தான். பாம்புப் பெட்டியைத திறந்து அதை உசுப்பிவிட ஒரு முறை அவன் மணிக்கட்டில் கொத்தியது. த என்று அதை அதட்டினான். உள்ளுணர்வில் அஙகிருந்து விலகவேண்டும என்றுதான் தோன்றியது. ஆனால் கட்டிப்போட்டவன் போல ஆகிவிட்டேன். சன்மத்துககு இந்த இடத்தைவிட்டு விலகப் போவதில்லை.கீரிப்பிள்ளை ஒன்றுக்குப்போனது. அந்த பைஜாமா சிறுமி பெரிய கொம்பை வைத்துக் கொண்டு அவன் தோளிலிருந்து கயிற்றுக்கு எவ்வி அதன்மேல லாவகமாக நடந்தாள்.அதன்பின் கழி முனையில் படுத்திருக்க இவன் கீழே இருந்து பாலன்ஸ்-பண்ணி அவளை சுற்றினான்.இந்த நேரத்தில் எல்லாம் பையன் கண்மூடிப் படுத்திருந்தான்.எனக்கு மிகவும் கவலையாக இருந்தது "யார் பெத்தபுள்ளையோ இதை எழுப்பவாணாமா?"

"வித்தை பாத்திங்கோ இப்ப நம்ம ராணி தட்டு கொண்டாருவா ஒரணா ரெண்டணா" என்று சொன்னபோது சபையோர் மெல்ல எழுந்திருக்க"ஏய்!" என்று குலை நடுங்குமாறு ஒரு அதட்டுப் போட்டான் "பாப்பார தெருவில வித்தை காட்டிட்டு காசு வாங்காம போகமாட்டேன் நீ மட்டும காசு தராம வூட்டுக்கு போனே என்ன ஆகும்பாரு" என்று கையில் அந்த பேனைக்கத்தியை எடுத்து தரையில் வரைந்திருந்த வாயில் கீறினான்.படுத்திருந்த பையன் வாயிலிருந்து ரத்தம் வடிந்தது."இதான் உனக்காகும் ராத்தரி" அப்டியே எல்லோரும் மூச்சடங்கி கதிகலங்கிப்போய் நின்றோம். மௌனமான சூழ்நிலையில் அவன் கத்தியைக் காட்டிக்கொண்டே மெல்ல எங்களிடம்-வந்தான். நான் என்னிடமிருந்த இரண்டணாவைப் போட்டதை அவன் பார்க்கக் கூட இல்லை. உடுக்கை அடித்துக் கொண்டே சுற்றி-வந்தான். கீரி சுற்றிக் கொண்டு இருந்தது. வித்தை எப்போது முடிந்தது ஞாபகமில்லை.மெல்ல கனவிலிருந்து விடுபட்டவன்போல நடந்து வந்தேன். வீட்டின் அருகில் வந்தபோதுதான் நிஜ உலகத்து நிதர்சனங்கள் எனக்கு உரைக்க "எங்கே இரண்டணா" என்பது-மட்டுமின்றி எங்கே கிண்ணி? கிண்ணியையும் வைத்துவிட்டு வந்துவிட்டேன். பாட்டி சமையலறையிலிருநது குரல் கொடுத்தாள்" ஏண்டா இத்தனை நாழி எண்ணையை மோடைமேல வச்சுட்டு பாடம் படிக்கபோ" என்றாள்.மீண்டும் தெருக்கோடிக்கு ஓடினேன் அதற்குள் வித்தைக்காரன் சாமக்கிரியைகளை கவர்ந்துகொண்டு சென்றிருக்க வேண்டும்.வெறிச்சோடியிருந்தது தெரு. போய்விட்டான்.

நான் செய்வதியறியாது திகைத்து நிற்க தெற்கு சித்திரை வீதி மூலையில் மீண்டும் கொட்டு சப்தம்எதிரொலித்தது. சப்தம் வந்த திசையை நோக்கி ஓடினேன்.தெற்குவாசல் அருகில் வாணி விலாஸ் பிரஸ் எதிரில் அவன் அடுத்த டேரா போட்டிருக்க-மெல்ல கூட்டம் கூடிக் கொண்டிருந்தது. வித்தைக்காரன் அருகில் சென்றேன்.அந்தப்பையன், வாயில் ரத்தம் வந்து கிடந்தவன் பைஜாமா பெண்ணுடன் சிரித்து விளையாடிக் கொண்டிருந்தான்.

வித்தைக்காரன் எங்கள் விட்டுக் கிண்ணியை திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தான் இது எவ்வளவு பெறும் என்பதுபோல் "வா தம்பி" "நான் வந்து கீழ சித்திரைவீதில வித்தை-பார்க்க வந்தேங்க கிண்ணியை விட்டுட்டு போய்ட்டங்க.அந்த கிண்ணி என்னுது" "தம்பி வந்தியா கிண்ணி தரேன் ஆனா ஒருகண்டிசன் "என்ன "எங்கூட வரியா வித்தைகாட்ட லால்குடி-பிச்சாண்டார்கோவில் இந்தபக்கம் குளித்தலை அந்தப்பக்கம் புதுக்கோட்டை வரைக்கும்-போகலாம்" என்றாள். பைஜாமா-சிறுமி என்னைப் பார்த்து மோகனமாக சிரித்தாள்.

"ஏபிசி புஸ்தவம் வெச்சிருக்கியா" என்று கேட்டாள் நான் அங்கேயே உட்கார்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தேன். "என் கிண்ணியை கொடு" " கொடுக்கறேன் கொடுக்கறேன் " அவன் என்னிடம் அந்த கிண்ணியை கொடுக்காமல் அவவப்போது நீட்டி நீட்டி கொடுப்பதுபோல் கொடுத்து-கையை இழுத்துக் கொண்டான் நான் பெரிசாக அழ ஆரம்பித்ததும் கொடுத்தான் "கிண்ணியை கொடுத்துட்டு வந்துரு நல்ல ஐயர் வூட்டு சாப்பாடு போடறேன் ஊர் உலகமெல்லாம் சுத்தலாம் பனாரஸ் அலகாபாத் கல்கத்தா " நான் வீட்டுக்கு திரும்பும்போது அந்தப் பெண் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் "வரல்ல? வரப்ப ஏபிசி பொஸ்தவம் கொண்டுட்டுவா" என்றாள் நான் ஓடிவந்து அவசரமாக என் உண்டியலை உடைத்து எட்டு காலணா சேர்த்து அரையர் கடைக்கு போய் எண்ணை வாங்கிக்கொண்டு வந்து விட்டேன்.

பாட்டி திட்டுவாளோ என்று நான் வித்தைக்காரருடன் போயிருந்தால் என்ன ஆகியிருப்பேன் என்று இந்த வயசில் எப்போதாவது எண்ணிப் பார்ப்பேன். தலையில் முண்டாசு கட்டிக்கொண்டு ஒருகையால் மத்தளம் தட்டிக்கொண்டு மற்றொரு கையால்புல்லாங்குழல் வாசிக்க அந்தப் பெண் சுழன்று-சுழன்று ஆட…. எது எப்படியோ இந்தக் கதையை எழுதியிருக்க மாட்டேன்.

தொடர்புடைய பதிவுகள்:

நூல் அறிமுகம் : ஸ்ரீரங்கத்துக் கதைகள் — – பா.ராகவன்

என் முதல் தொலைக்காட்சி அனுபவம்! – சுஜாதா

வேதாந்தம் – சுஜாதா

உஞ்சவிருத்தி – சுஜாதா

ஸ்ரீரங்கத்து தேவதைகள் – கதையா ? கற்பனையா ?  

ஓலைப்பட்டாசு — சுஜாதா

No comments: