For this Day:

;

Fill up the tank... or plan alternatives


டீசல் பற்றாக்குறை விஸ்வரூபம்: பெரும்பாலான பங்குகள் மூடல்!
சென்னை: தமிழகம் முழுவதும் டீசல் பற்றாக்குறை விஸ்வரூபம் எடுத்துள்ளது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பங்குகள் மூடப்பட்டன. இதனால் லாரிகள், வேன்கள் உள்ளிட்ட டீசல் வாகனங்கள் டீசல் கிடைக்காமல் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

சமீபத்திய பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 90 சதவீத பங்குகளில் சாதாரண பெட்ரோல், டீசல் விற்பனை அறவே நின்று போய் விட்டது. அதற்கு மாறாக பிரீமியம், பவர் பெட்ரோல், டீசல்தான் விற்கப்பட்டு வருகிறது.

ஆனால்  சாதாரண பெட்ரோல், டீசலைத்தான் பவர், பிரிமீயம் என்ற பெயரில் விற்று ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக டீசல் விநியோகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. டீசல் விநியோகம் போதிய அளவில் இல்லாததால், பல பங்குகளில் டீசல் ஸ்டாக் இல்லை என்ற போர்டு தொங்க விடப்பட்டது.

இந்தச் சூழ்நிலையில் இன்று நிலைமை மேலும் மோசமடைந்தது. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பங்குகளில் டீசல் இல்லாத காரணத்தாலும், பவர், பிரிமீயம் பெட்ரோலுக்கும் பஞ்சம் ஏற்பட்டதாலும் பங்குகளை மூடத்தொடங்கியுள்ளன. சென்னை நகரில் பல பங்குகளை மூடி விட்டனர்.

தமிழகம் முழுவதும் இதே நிலைதான். இதன் காரணமாக வேன்கள், லாரிகள், பள்ளிப் பேருந்துகள், ஷேர் ஆட்டோக்கள் உள்ளிட்ட டீசலால் இயங்கும் வாகனங்கள் ஸ்தம்பித்துப் போயுள்ளன.

திறந்திருக்கும் ஒன்றிரண்டு பங்குகள் முன்பு நூற்றுக்கணக்கான வாகனங்கள் குவிந்துள்ளன. அவற்றை ஒழுங்கு படுத்தி வரிசையில் வர வைத்து டீசல் வழங்கி வருகின்றனர். பல பகுதிகளில் கொந்தளிப்பும் காணப்படுகிறது. இதனால் பங்குகள் முன்பு போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Source: Oneindia